கவிதைக் குறள்

மனதில் விரியும் மலரே கவிதை !
தினமும் அதனைத் துதி !

சிறுகச் சிறுக இதயம் திருடும்
இறைவன் அருளே கவி !

உள்ளம் உரைக்கும் உணர்வை எழுதிடும்
வெள்ளக் கலையே கவி !

கற்பனைப் பெண்ணின் கருவே கவிதை
சொற்களின் கோவை கவி !

அறிவில் உதிக்கும் அழகே கவிதை !
அறிந்தோர் எழுதும் கவி !

உண்மை உரைக்கும் உயர்வு கவிதையே !
எண்ணம் இனிக்க எழுது !

ஆற்றல் பெருக்கும் அருவி கவிதையே !
காற்றினைப் போல்செய் கவி !

அழகைச் சுமக்கும் உருவே கவிதை !
பழகிக் கவிதை பயில் !

மொழிகள் சுவைக்கும் முறையே கவிதை  !
பழிக்கா(து) இதனைப் பழகு!

பத்தும் நிகழ்த்தும் பொருளே கவிதை!நீ
கத்தி உரைப்பாய் கவி !

-விவேக்பாரதி
26.02.2015

Comments

Popular Posts