ஆண்டிற்குத் தாலாட்டு

ஆராரோ ஆரிரோ காலமகள் ஈன்றெடுத்துப்
பாராட்டித் தான்வளர்த்த புண்ணியமே - ஊராரும்
உற்சாக மாகவே வாழ்த்திடக் கண்ணுறங்கு !
தற்போது அம்மாடி நீ !

பதினான்காம் ஆண்டென்னும் பேர்கொண்ட பெண்ணே
அதியழகாய் அற்புதமாய் நீயும் - பதமலரை
நீட்டி உறங்கடி ! ஆயிரம் செய்திகள்
காட்டி வளர்ந்துநின்றாய் ! ஆம் !

விடியல் வரும்போது நீயும் புதிதாய்
அடியே அழகாய்ப் பிறப்பாய் - வடிவழகே !
மக்கள் உனையும் பதினைந்தெனக் கூப்பிடுவார்
சொக்கி விழிமூடாய் இன்று !

உறங்கடி நீயும் பதினான்கே; நாளை
பிறப்பாய் பதினைந் தெனவே - சிறப்பாய் !
உலகமக்கள் வாழ்ந்திட நன்மைகள் தந்தாய்
மலர்விழியை மூடாய் மகிழ்ந்து !

-விவேக்பாரதி
31.12.2014

Comments

Popular Posts