மௌனம் பேசினால்

நெடுநாள் நெஞ்சில் பூட்டிய வார்த்தைகள்
விடுகணை என்றே விரைந்து பாயும் !

அமைதிக் காலம் அகன்றே மனதும்
சுமையொன் றிறக்கிய உணர்வில் சாயும் !

மூடிக் கிடந்த அகமெனும் வீட்டில்
பாடிப் பறக்கும் இன்பப் பறவை !

கோபம்; சோகம்; வெட்கம்; சிறுமனஸ்
தாபம் நீங்கிட நல்வழி யாகும் !

துயில்கொண்ட நாவும் தூக்கம் விழித்தே
ஒயிலாய்ச் சொற்களின் அம்பலம் ஏறும் !

சாது மிரண்ட காடென உள்ளம்
மோதும் ! மொய்க்கும் ! முழுதாய் மாறும் !

மௌனம் பேசினால் இத்தணை நேரும் !
ஔடதம் இன்றி மனங்களும் ஆறும் !

-விவேக்பாரதி
28.10.2014

Comments

Popular Posts