சக்திச் சுடர்
அக்கினிக் குஞ்சொன்று கண்டாள் - அதை
ஆதி பராசக்தி என்னுளில் வைத்தாள்!
கக்கிருள் நீங்கிடக் கண்டேன் - அதில்
காளி மகாசக்தி நல்லுரு கண்டேன்!
சிக்கெனப் பற்றின ளென்னை - பெரும்
சீரென நல்லறி வென்னுளி லூட்டிக்
கொக்கொக்கொக் கென்னச் சிரித்தாள் - அவள்
கொள்ளை அழகினில் என்னை மறந்தேன்!
இன்ன உருவெனச் சொல்லி - அவள்
இருக்கின்ற தோற்றத்தை யார்சொல்லக் கூடும்?
பொன்னின் ஒளியெங்கள் அன்னை - அற்ப
போகம் விலக்கும் அறிவெங்கள் அன்னை!
வன்மைப் பெருக்கெங்கள் அன்னை - எழில்
வனப்பிலெல் லாமிங் கிருப்பளெம் அன்னை
தன்னை யுணருதல் அன்றி - இந்தத்
தாயை உணருதல் சாத்திய மாமோ?
உள்ளம் திறந்துநாம் வைப்போம் – அதில்
ஓமெனும் மந்திரம் நாடொறும் தைப்போம்
வெள்ளம் கவிழ்கின்ற வேளை – சக்தி
வெற்றி முழக்குடன் தோன்றுவள் அன்றோ!!
20.04.2017