புரட்சி இஃதே !

ஒருபுறத்தில் நீரின்றி நிலமு மின்றி
    ஒடுங்குகிறார் விவசாயம் பார்த்த மக்கள்
ஒருபுறத்தில் மருந்தின்றி உதவி யின்றி
    ஓயாமல் வாடுகிறார் ஏழை மக்கள்
பெரும்நகரில் பணமென்னும் பேயைக் காட்டி
    பெற்றதெலாம் ஏமாற்றிப் பிடுங்கு கின்றார் !
ஒருசமுகம் அழுதிருக்க மற்றொன் றிங்கே
    ஓங்கிச்சி ரிக்கின்ற இழிவைக் கண்டோம் !


முயலொன்றை ஒருசிங்க மடிக்க லாகும்
    முனைந்திங்கே பலசிங்கம் நரிகள் எல்லாம்
பயந்தந்து வெருட்டுவது நியாய மோசொல்
    படுகொடுமை காட்டினிலும் இதுநே ராதே !
அயர்பவர்கள் எழுந்துவிட்டால் அச்ச மில்லை
    அவர்துணையே நமதுபடை வாடா தம்பீ
புயமுண்டு சக்தியவள் துணைதா ணுண்டு
    புயலுண்டு பெருங்கூட்ட மதன்பேர் தம்பீ !

இதுபொறுக்க லாகாதே எழுக தம்பீ !
    இனியிதுபோல் நேராம லிருக்க வேண்டின்
பொதுவான தத்தனையும் பொதுவில் வைப்போம்
    போக்கிற்கு நமையாட்டும் புல்ல ருக்கும்
எதுகடமை என்றறிய வகைமை செய்வோம்
    எப்போதும் எழுச்சியிலே மதியும் வேண்டும் !
புதுவிதியென் றெதுவுமிலை இருந்த ஒன்றைப்
    புதுப்பிப்போம் மீண்டும்வா ! புரட்சி இஃதே !

-விவேக்பாரதி
09.06.2017

Popular Posts