கிள்ளுங்கள் !

மின்னல் ஒன்று நெஞ்சத்தில்
   மீண்டும் மீண்டும் அடிக்கிறது
கன்னல் தின்ற வாய்போலக்
   கடைவாய் எல்லாம் இனிக்கிறது
முன்னால் பின்னால் என்கால்கள்
   முந்தி முந்தி நடக்கிறது
என்ன எனக்குள் நேர்கிறதோ
   இதுதான் காதல் என்பதுவோ ?

முகத்தைக் காணா நாளெல்லாம்
   முள்ளாய் நகர்ந்து செல்கிறது
முகத்தைக் கொஞ்சம் கண்டுவிட்டால்
   முழுநாள் போதா தென்கிறது
அகத்தில் எங்கும் அவளுருவம்
   ஆடி ஆடி சிரிக்கிறது
இகத்தில் இதனை என்னென்பார்
   இதுதான் காதல் என்பதுவோ ?

கவிதை எழுதப் பிடிக்கிறது
   காட்சி கண்முன் விரிகிறது
யுவதி முகத்தைக் கண்டாலும்
   உன்றன் நினைவே எழுகிறது
கவலை எல்லாம் பறக்கிறது
   கண்கள் தூங்க மறுக்கிறது
இவற்றை எல்லாம் என்சொல்வேன் ?
   இதுதான் காதல் என்பதுவொ?

விடை வேண்டும் சொல்லுங்கள்
விரல் கொண்டு கிள்ளுங்கள் !!

-விவேக்பாரதி
10.06.2017

Popular Posts