அழுது வருந்தாதீர் !!

தூக்கமி லாதெழும் விழிகளி ரண்டினில்
   தோன்றும் கனவுகளே - எனைத்
   தூண்டும் நினைவுகளே - உம்மை
ஆக்குவ தார்வழி போக்குவ தாரவர்
   ஆரெனச் சொல்லுங்களே ! - அடை
   யாளங் காட்டுங்களே !

இருட்டறை தன்னுளே இமைகளுக் குள்சுடர்
   இருத்திடும் தீபங்களே - நான்
   இயற்றிய பாவங்களே - எனை
வெருட்டுவ தேன்?மிக நெருக்குவ தேனென
   விரைவுடன் சொல்லுங்களே - சொல்லி
   வெளியினில் செல்லுங்களே !

உடலினை விட்டுயர் வானைய டந்திட
   உந்திடும் நெஞ்சகமே - அட
   ஊமை யஞ்சுகமே ! - உன்
படபட புக்கென காரண மோவதைப்
   பகர்ந்திடு என்னிடமே - கதை
   பகிர்ந்திடு சிந்தையிலே !

எண்ணமெ னுங்கொடி தன்னைய சைத்துயர்
   ஏகிடும் பூங்காற்றே ! - துயர்
   ஏற்றிடும் தண்ணூற்றே ! - இந்த
வண்ணந டங்களை என்றுமு டித்துயிர்
   வாழ்ந்திடச் செய்யுவிரோ ? - விடை
   வழங்குக இங்ஙணமே !

சோர்வினைத் தந்துடன் தூக்கம்ப றித்தெனை
   சோதனை செய்யுகிறீர் ! - உயிர்
   சோதியைக் கவ்வுகிறீர் - உமை
ஆர்த்தெழுந் தாலுமை மாய்த்திடு வாளெனை
   அண்டிநெ ருங்காதீர் ! - பின்
   அழுதுவ ருந்தாதீர் !!

-விவேக்பாரதி
18.04.2017

Popular Posts