விரலுக்கு மடல்

ஆறாம் விரலே அழுகின்றேன் - உன்
    அழகை நினைத்தே அழுகின்றேன் !
வேறாய் உன்னைக் கருதியவன் - உனை
    வேண்டா மென்றே திருகியவன் !
கூறாய் உன்னை வெட்டுகையில் - நான்
    குழந்தை ! எனக்கும் நினைவில்லை !
மாறாய் இப்போ துனையெண்ணி - விழி
    மழையைப் பொழிய நிற்கின்றேன் !

மற்றோர் கையில் இருபுறமும் - நீ
    மணிபோல் ஆடிக் குலுங்குவதைச்
சற்றே கண்டேன் ! நினைவிழந்தேன் - என்
    சகமே நின்று போனதன்று !
கற்றோர் கடவுள் காளிதமை - என்
    கைகள் வணங்கும் நேரத்தில்
பெற்றி ருப்பாய் முன்னிலையை ! - அப்
    பேற்றை நானும் பறித்ததனால்,

உருவில் சற்றே பெருத்திருப்பாய் ! - உனக்
    குரிய நகந்தான் வளர்ந்திருக்கும்
பெரிதாய் நீயின் றிருந்திருந்தால் - தனிப்
   பேரே நானும் பெற்றிருப்பேன் !
கருவில் எனக்குப் பாசத்தால் - அக்
    கடவுள் கொடுத்த உயர்பரிசே !
பெருமை நீயென் றெண்ணாது - வலிப்
    பேழை நீயென் றெண்ணியதால்

கொடுத்தோன் மீது குறையில்லை - அதைக்
    கொண்ட என்மேல் தவறில்லை
எடுத்தோர் மீதும் பழியில்லை - விரல்
    எடுக்கச் சொன்னார் மேலில்லை
வடித்துக் கண்ணீர் பொங்கவழும் - இம்
    மனத்தின் மீதே பிழையெல்லாம் !
கொடுத்தான் எடுத்தான் இதையிங்கே - விதி
    கொள்ளும் ஆட்டம் என்போமே !

-விவேக்பாரதி
06.03.2017

Popular Posts