துரியோதனன் நம்பிக்கை
(பாரதப் போரில் அர்ச்சுணனும் கண்ணனும் ஒன்றாகச் சேர்ந்து வரும் காட்சியைக் கண்டு துரியோதனன் சொல்வது)
சேனை பதினாறு நம் வசங்கொண்டு
சேர்ந்த பகை ஐந்தை வெல்லுவோம் - பல
யானை பலங்கொண்ட பீஷ்மர் வசமுண்டு
யாரும் வெற்றியே கொள்ளுவோம் !
துரோணர் இங்குண்டு கர்ணன் இங்குண்டு
துக்ஷலைக் கேள்வன் உண்டுபார் - அட
வீரன் நானுண்டு தம்பி நூறுண்டு
விந்தை மாமனும் உண்டுபார் !
ஐந்தின் முன்னூறு தோற்குமோ? பாறை
ஆற்றின் விசைதன்னை பேர்க்குமோ ? - உடல்
நைந்து வீழ்வதுவும் உறுதி காண்! ஐவர்
நாசம் காணுவதும் நிச்சயம் !
சோறு கண்டொருவன் பொங்குவான்! ஒருவன்
சொன்ன தருமவழி கொல்லுவான் - மலர்
நாறு குழலணங்கில் வீழுவான், அந்த
நல்ல குணமற்ற அர்ச்சுணன் !
மேலும் இருவர்! அவர் தும்பிகள் ! சின்ன
மேடு கண்டஞ்சும் தம்பிகள் - அட
காலன் வேலைமிக எளிது தான்! இவரைக்
கையில் அள்ளியவன் ஏகுவான் !
கூந்தல் முடியாத பெண்ணின் வெஞ்சினமும்
கூற்றை ஒத்ததெனச் சொல்லுவார் - அட
ஏந்தும் வீரமது கொண்டு நானந்த
எமனின் சேனையையும் வெல்லுவேன் !
மோனை யற்றதொரு மொக்கைக் கவிதையென
மோகக் கண்ணனும் நிற்கிறான் - அவன்
சேனை, அண்ணன்துணை யாவும் நமதுவசம் !
செல்லுமோ அவனின் ஆட்டமே !
நாடு நம்முடைமை நாசம் அவருடைமை
நல்ல புகழும் இனி நம்மிடம் - பெரும்
பீடு கொண்ட உயர் அத்தினாபுரமும்,
பின் இந்த்ராபுரியும் நமது காண் !
மாமன் சூதுண்டு மன்னும் சேனைகள்
மாபெருங் கரிகள் உண்டடா ! - அட
நாமும் வென்றுவிட நாட்கள் அதிகமிலை
நல்ல தேரை நடத்தடா !
சின்ன பாலகரைக் களம் இறக்கிவிடும்
சிறுமை அவரிடத்தில் காணடா - தம்பி
என்ன தயக்கம் ? இனி ஏற்று நாண் ! இவரை
எட்டு நொடியில் மண்ணாக்கலாம்
-விவேக்பாரதி
12.05.2017