புகைக்குப் பூட்டு

உதட்டில் வைத்தே உரிஞ்சுகிறாய்ப் ! புகை
   உயிரை உரியும் அறிவாயா ?
இதமே இதுவென்று இயம்புகிறாய் !உன்
   இதயம் பொசுக்கும் அறிவாயா ?

நீயும் மாய்வாய் உன்னைச் சுற்றி
   நிகழும் அனைத்தும் மாண்டுவிடும்!
தீயும் பரவித் திக்கை நிரப்பத்
   தீதே உலகை ஆண்டுவிடும் !

நஞ்சின் குவியல் தன்னை உனக்கு
   நயமாய்த் தந்தால் ஏற்பாயா ?
வஞ்சப் புகையும் நஞ்சின் குவியல்! 
   வன்மை இன்றித் தோற்பாயா ?

புகைக்கும் பழக்கம் தன்னை விட்டுப்
   புண்ணியம் தன்னை நாட்டிவிடு!
புகைத்துக் கிடக்கும் வாயைக் கண்டால்
   பூட்டை அங்கே போட்டுவிடு !!

-விவேக்பாரதி
31.05.2016

Popular Posts