ஏனடி அழுகின்றாய் ??

எதற்கென் றறியாமல் - இங்கு நீ
   ஏனடி அழுகின்றாய் ?
பதம் வலித்ததுவோ ? - எதைக்கண்டு
    பயந்து விட்டாயோ ? 


 கேட்ட பொருளையம்மாள் - இப்போது
    கிடையா தென்றாளோ ?
ஓட்ட மெடுக்கையிலே - தடுக்கியோர்
    ஓரம் விழுந்தாயோ ?

காலைப் பொழுதினிலே - வெண்ணிலவின்
    காட்சிக் கழுகிறாயோ ?
வேலை மொழிந்தாரோ - தென்றல்தான்
    வேதனை தந்ததுவோ ?

கன்னஞ் சிவந்திடவும் - நல்லிரண்டு
    கண்கள் நிறைந்திடவும்
புன்னகை தான்மறந்து - எதற்கடி
    புரண்டே அழுகின்றாய் !

விண்மீன் கொண்டுவந்து - சொட்டாங்கல்
    விளையாடத் தந்திடவோ ?
வண்ண வில்திரித்து - அணிந்திட
    வட்ட நகைதரவோ ?

அழுகை மறந்துவிடு - செல்லமே
    ஆனந்தம் சூடிவிடு !
விழுதலு மேதுக்கடி - செல்லமே
    விளையாட ஓடிவிடு !

பேடி அழுதிடலாம் - தைரியன்
    பேத்தி அழுவதுண்டோ ?
பாடி மகிழ்வமடி - இன்னொரு
    பாப்பா பாடலொன்றை !

 -விவேக்பாரதி
30.05.2017

Popular Posts