அண்ணனும் அக்காளும்


அண்ணனின் தோள்வலி கொண்டு - உடன்
    அக்காளும் காட்டிடும் அன்பினைக் கொண்டு
கண்முன்பு வந்தனள் பெண்ணாள் - அவள்
    காக்கும் இறையவன் செய்திட்ட பொன்னாள்
வண்ண மலர்திகழ் கூந்தல் - எழில்
    வாரி வழங்கிடும் மென்மையி னேந்தல்
திண்ண முடையநற் பேச்சு - கரத்
    தீண்டலில் தோன்றிடும் அன்பெனும் பூச்சு !

கொவ்வைச் சிவப்பிதழ்ச் சாயம் - அது
    கொள்ளும் சிரிப்பில் துயர்களின் மாயம்
தவ்வும் கரத்தொலி கேட்டால் - உடன்
    தள்ளி நிறைப்பர் பணமெனும் நோட்டால்
எவ்விதத் தாலிவர் தாழ்ந்தார் ? - இதில்
    என்ன தவறிவர் வாழ்வினில் பூண்டார்
செவ்விய மண்ணிலுள் ளோரே - பதில்
    செப்பிடக் கேட்கிறேன் சீக்கிரம் சொல்வீர் !

பெண்ணுக்குள் சக்தியைக் கண்டோம் - அட
    பேரள வாண்களி லேசிவம் கண்டோம்
மண்ணில் திருநங்கை தம்மில் - புகழ்
    மாதொரு பாகனைக் கண்முன்பு கண்டோம்!
புண்ணியம் வேண்டியிப் பாரில் - பல
    பூசைகள் யாகங்கள் ஆக்குகின் றீரே
உண்மையில் அன்பது தெய்வம் ! - இனி
    உய்திட வேண்டில் இதையுணர் வீரே !

ஏளனப் பார்வையில் பார்த்தல் - பழி
    ஏற்றி அடுக்கி யவர்மிசை கோத்தல்
ஆளென் றுணரம றுத்தல் - உடல்
    அருவருப் பாகும் வகையில் நடத்தல்
நீளுமெனில் புவி சாகும் - இது
    நிச்சயம் சக்தியின் வாக்குமெய் யாகும்
மாளும் இனியிவை யென்றால் - ஒளி
    மண்ணிடை ஓங்கிடும் நிச்சயம் உண்மை !

அன்பு விழியொடு நோக்கல் - நம
    தருகில் அழைத்தவர் நன்னலம் கேட்டல்
தெம்பு தரும்மொழி பேசல் - அவர்
    தேவ னுருவென நெஞ்சுள் நினைத்தல்
இன்பம் தரும்வழி யாகும் - இதை
    இங்கு நடத்த அவர்பிழை சாகும்
அன்புக் கடவுளின் ஊட்டம் - அதில்
    ஆயிர மாயிரம் பண்புகள் ஈட்டம் !

-விவேக்பாரதி
12.02.2017

Popular Posts