நம் அறிவியல்

என் நண்பனின் "We are not Educated illiterates" என்னும் இந்த ஒரு சொல் என்னை இப்படி எழுத வைத்தது.

ஜல்லிக்கட்டு !
இது தமிழன் அடையாளம் !

கணினி அடக்கத் தெரியா மனிதா
       காளை அடக்கல் ஏதறிவாய் ?
   கற்றும் துணிச்சல் இல்லா மனிதா
         கருங்கல் பெயர்த்தல் ஏதறிவாய் ?
அணியாய் எழுந்த தமிழர் வீரம்
       ஆண்டிராய்ட் தமிழா ஏதறிவாய் ?
   ஆற்றல் மிகுந்த தமிழர் சிந்தை
      அடிமை மனிதா ஏதறிவாய் ?
துணிவே துணையாய் அறிவின் இயலைத்
      துவளா நெஞ்சம் அதனோடு
   தோன்ற நடத்தும் தமிழர் அறிவைத்
      தொலையும் தமிழா ஏதறிவாய் ?
தணியா வேட்கை பொங்க வெழுந்தத்
      தமிழர் மாண்பை ஏதறிவாய் ?
   தமிழ்விளை யாட்டைப் புறத்தில் தள்ளும்
      தமிழா நீதான் ஏதறிவாய் ?

களத்து மேட்டில் மண்ணைப் பதமாய்க்
      கலையாய் ஆக்கும் காளைகளைக்
   கடவுள், தோழன், உடன்பி றந்த
      கருவாய்ப் பார்த்தல் அறிவாயா ?
புளித்துப் போன மாவைப் பசியில்
      புசிக்கும் மேலை வழக்கத்தைப்
   புரியும் அறிவில் தமிழா ! நெல்லின்
      புதும ணத்தை அறிவாயா ?
வளத்துக் கெல்லாம் வளமாய் மாட்டை
      வணங்கி டல்தான் அறிவாயா ?
   வளமைக் கீரை அதற்கு மிட்டு
      வளர்க்கும் பாசம் அறிவாயா ?
தளத்தில் எல்லாம் ஜல்லிக் கட்டைத்
      தடைக்குள் ளாக்கச் சொல்லுகிறாய் !
   தமிழா தமிழா தமிழர் தீரத்
      தன்மை பற்றி அறிவாயா ?

காளை மாட்டைப் பார்த்துள் ளாயா ?
      கரிசல் மணத்தை அறிவாயா ?
   காலை எழுந்துக் கஞ்சி குடித்துக்
      கழனி வயல்சென் றுள்ளாயா ?
தோளை உயர்த்தி ஏரை எடுத்துத்
      தோன்றும் மாட்டின் பின்பூட்டித்
   தொழிலும் நடக்க அதனைக் கொஞ்சித்
      தொட்டுத் தொழுது முள்ளாயா ?
நாளைக் காக நாளு மோடி
      நகரும் வாழ்க்கை வாழ்கின்றாய்
   நகரந் தன்னில் நாகரி கத்தின்
      நாமஞ் சொல்லிக் கிடக்கின்றாய்
ஆளை வளர்க்க அலைவ தாலே
      அடையா ளத்தை இழப்பாயா ?
   ஐயோ ! தமிழா ! அதிக நவீனம்
      அறிவைப் பறிக்க விடுவாயா ?

காட்டைத் திருத்திக் கடிதங் குழுதுக்
      காசைக் கொடுக்கும் காளைகளைக்
   கல்லா தவனா கொடுமை செய்வான் ?
      கற்று நீயேன் செய்கின்றாய் ?
வேட்டை யிடுதல் குற்றம் ! அன்றி
      வெல்லும் அறிவியல் பிழையாமோ ?
   வேகத் தமிழர் மாட்டின் நலத்தை
      வேண்டுவ திங்கே தவறாமோ ?
மாட்டின் திமிரை இறுகப் பற்றி
      மண்ணில் கொஞ்சம் சென்றுவிட்டால்
   மாபெரும் வீரன் அவனுக் கந்நாள்
      மணமே முடிந்துத் தந்திடுவார் !
ஏட்டைப் படித்த காரணத் தாலே
      எல்லா மறிந்து கொண்டமென
   எக்கா ளத்தை அறியா மையின்
      எடுத்துக் காட்டாம் எனலாமே !

ஜல்லிக் கட்டின் தன்மை தன்னைச்
      தடுக்கச் சொல்லும் முன்னம்நீ
   சரியாய் அறிந்து கொள்வாய் தமிழா
      ஜல்லிக் கட்டோர் அறிவியல்தான்
சொல்லித் தந்த பாட்டன் பூட்டன்
      சொல்லு கின்றார் இலக்கியத்தில்
   சோகம் தானே ! அறியா தமிழா !
      சோதிக் காததை விலக்குவதில் !
நல்ல காளையின் ஆண்மை யாலே
      நாட்டுப் பசுக்கள் கன்றீணும்
   நாட்டுப் பசுவின் நலத்தால் தானே
      நமக்கும் நல்ல பால்சேரும்
எல்லா மறிந்த திருட்டுக் கயவன்
      எவனோ காட்டும் பொய்நம்பி
   எதிர்க்க லாமா நம்மறி வியலை ?
      எதுதான் நியாயம் சொல்தம்பி !

-விவேக்பாரதி
30.12.2016

Popular Posts