காளி

கண்கள் எங்கும் கதிரவச் சோதி
    காட்சி யெல்லாம் காட்டிடும் சோதி
பண்கள் படித்திடும் புள்ளின மெல்லாம்
    பரவச மெய்திடப் பூத்ததிச் சோதி
எண்ண மெங்கிலு மிருட்டு மகல
    எழிலின் உருவம் யாவும் விரிய
வண்ண சோதியாய் வந்தனை காளி
    வாழ்வு முன்மடி யாடிடுந் தூளி !


நெஞ்சி லலையடித் தாடும்பொய்க் கடலும்
    நேர்மை யற்றவளி வீசிடுங் கரையும்
வஞ்ச மாநதி சேர்ந்திடக் கண்டே
    வசையு முற்றது வாடிடும் போதில்
தஞ்ச மென்றுநான் தரணியில் வாழத்
    தாழ்வு போக்கிட வந்தநற் றோணி
கொஞ்சு மாமொழிக் கோதையே காளி
    கொலுவிருக்க என்னுளம் ஏங்கிடு மாழி !

உள்ள விடுதலை ஊமை மனத்திடை
    உண்மை உணர்ந்திடும் வீரத் திறத்துடன்
கள்ள மற்றசொல் கட்டுரை சேதிகள்
    கற்ற றிந்திடும் பக்குவ மதனையும்
கொள்ளை கொண்டிடும் தூக்கக் காட்டிடை
   கொண்ட பாதையைக் காட்டிடும் சோதி
துள்ளும் பாலனை ஏற்றுவை காளி
    துயரி லாவணம் அமைகவென் நாழி !

பார்க்கும் வையகம் பழகிடும் தோழர்கள்
    பண்டை வீண்மடச் சாத்திரக் குப்பைகள்
வேர்க்க வைத்திடும் வீண்புகழ் தன்னுளே
    வெந்து வீழ்ந்து துயருறும் போதினில்
ஈர்க்கும் காந்தமா யிரும்பெனைத் தூக்கினை
    ஈடி லாதபொன் னாகவே மாற்றினை
வார்க்கும் சொற்களுள் வாழுவை காளி
    வலிமை கூட்டிடும் நீயொரு தோழி !

-விவேக்பாரதி
27.05.2017

Comments

Popular Posts