மின்னலின் வேகம்

இருட்டிக் கருக்குது வானம் - மழை
    இயற்றித் தொலைக்குது மேகம்
கருத்தைக் கவருது தென்றல் - ஒளி
    கண்ணுக் களிக்குது மின்னல்
பெருக்கும் இடியொலி நாதம் - ஜெயப்
    பேரிகை கொட்டுது வானம்!
வருத்தும் வெயிலிடர் மாய - மழை
    வரத்தைக் கொடுத்தனள் அன்னை!

பூத உருவினைக் கொண்டு - பயப்
    பூழ்தி கிளப்புது தாய்மண்!
ஆதரவாக நிமிர்ந்தே - மழை
    அழைப்பைக் கேட்பன புற்கள்!
காதல் மிகுந்த இயற்கை - புதுக்
    கவிதை பொழிந்திடும் நேரம்
மோதித் துளைக்குது வாசம் - உயர்
    மோனம் கொடுக்கும் மண்வாசம்!

உள்ளம் நனைக்குது தண்ணீர் - பல
   உணர்வை எழுப்புது தண்ணீர்
பள்ளம் அனைத்திலும் ஈரம் - முகில்
    பாட்டிசை கூட்டிடும் நேரம்
அள்ளிப் பருகிடும் நெஞ்சம் - அது
    அன்புக் கவிதையைச் சிந்தும்
துள்ளிக் கிடக்குது தேகம் - அதில்
    தோன்றுது மின்னலின் வேகம்!!

-விவேக்பாரதி

12.08.2017

Comments

Popular Posts