இரயிலிருக்கை விடு தூது
காப்பு
கன்னியைக் கண்டதும் காதலென எண்ணுகின்ற
என்றன் பதின்ம எழில்வயதில் - அன்றொருநாள்
நான்செய்த ஓர்குறும்பை நன்றாகப் பாடுகிறேன்
ஊன்செய்தான் காக்க உவந்து!
புதுமை
செல்வதையே தூதாய்ச் செலுத்திடுவார், என்றாலும்
செல்வதெலாம் வெல்லத்தான் சென்றிடுமோ? - சொல்லுகின்ற
தூதைத் திறம்படவே சொல்வதுவே நற்றூதாம்!
ஈதை உணர்ந்திடுவீ ரிங்கு!
நூல்
ஓடும் இரயிலில் உட்கார்ந்து கொண்டுயான்
பாடிக் கவிதைப் பரவசத்தில் - ஈடில்லாக்
கற்பனைக் காட்டிடைக் கண்டுயிலும் நேரத்தில்
விற்புரு வத்தாள் விசைகணைகள் - அற்புதமாய்
வீசும் விழியுடையாள்! விந்தையே தன்னுருவாய்ப்
பேசும் திறத்திலே பெண்ணொருத்தி - கூசுங்
கழுத்தோரம் தொட்டுக் கனவுலகை நீக்கி
"எழுந்திருங்கள் ஈதென் இடமென்" - றெழில்மொழிந்தாள்!
பேச்சில் மயங்கியான் பேசாமல் நின்றுபின்னர்
காய்ச்சல் தெளிந்திடத்தைக் கண்டுகொண்டு - மூச்சில்லாப்
பொம்மைபோல் அன்னாள் பொலியும் முகத்தழகில்
செம்மை உடலில் செழிப்பினிலும் - அம்மங்கை
கொண்ட குரலினிலும் கொள்கை மறந்தவனாய்
விண்டவாய் மூடா விசித்திரனாய்க் - கண்டிருந்தேன்!
என்றன் இருக்கைக் கெதிர்ரமர்ந்தாள்! ஆகாகா
அன்றென்றன் ஆர்மோண்கள் ஆட்டத்தை - என்சொல்வேன்?
பார்வையிலே அன்னவளைப் பாதியெனத் தின்றுவிடும்
ஆர்வத்தில் கண்டிருந் தாழ்ந்திருந்தேன்! - போர்வித்தை
நன்கறிந்த கண்ணாள் நயனத்தில் அம்பெய்து
மன்மதனைக் கூப்பிடும் மங்கையவள்! - முன்னிருந்த
மேனியெழில் சொல்லி மெதுவாகப் பேசுகிறேன்!
தேனிருப்பை மெல்லுதட்டில் தேடியே - வானிருக்கும்
புள்ளும் குழவிகளும் பூச்சித்தேன் ஈக்களும்
துள்ளிப் பறந்து துவண்டிருக்கும் - கொள்ளைமர்ம
முக்கோணக் காந்தமது மூக்கென் றிலங்கிநிற்கும்!
அக்கோணம் பெற்ற அழகெழுத - எக்கவியும்
மண்ணிற் பிறக்கவில்லை மன்னுகின்ற இவ்வெழில்கள்
கண்ட மயக்கத்தில் கத்திநின்றேன் -பெண்ணவளோ
நெஞ்சக் குழிக்குள்ளே நேராத அற்புதத்தைக்
கொஞ்சும் ஒருவிழியில் கொண்டுதந்தாள்! - மஞ்சக்
கலைபழக என்றன் கனவினிலே நின்றாள்!
அலைகடலில் கைசேர்ந் தணைத்தாள் - மலையெனவே
அவ்வேளை தூக்கம் அழைத்திடவே கண்மூடி
செவ்விளமைப் பெண்ணோடு சேர்வதுபோல் - கொவ்வைச்
சிவப்பிதழ் உண்டு சிலிர்ப்பதுபோ லெல்லாம்
உவந்து கனவுகண்டே உய்தேன் - கவிக்கனவு
நின்று முடிந்த நிமிடத்தில் நானெழுந்தேன்!
கன்னி மறைந்துவிட்டாள் காலியிடம் - நின்றதங்கே!
அன்றுவந் தங்கே அழகுபடத் தோன்றியே
நின்றவளை என்னென்று நீட்டிடுவேன் - மென்னகையாய்
வந்து மனத்தில் வசந்தம் பரப்பியபூ
அந்த இடத்தில் அருகிலில்லை - இந்தசேதி
ஓர்ந்த மனத்தில் ஒருகோடி மின்னலிடி
நேர்ந்துவந் தென்னை நெருக்குயொலி - ஆர்த்திருக்கும்
காட்சியினைக் கண்கொண்டு காண்பதுவுஞ் சாத்தியமோ ?
மீட்சிபெற உள்ளம் மிரண்டிடவே - நீட்சியுறும்
கோலங்கள் சொல்லவொணாக் கோரங்கள் அத்தனையும்
பாலகனைப் பாடாய்ப் பலிக்கேட்கும் - ஓலமெலாம்
நீங்கி எனதுள்ளம் நித்ய அமைதிபெற
ஏங்கி ஒருவழியை என்மூளை - தாங்கியதால்
நின்னையோர் தூதாய் நிகழ்த்துகிறேன் நீசென்றே
என்சேதி தாங்கி எழிலாகக் - கன்னியவள்
நான்கண்ட காட்சி நனிக்கன வெல்லாமுந்
தான்கண்டு கொள்ளும் தரம்செய்வாய் ! - "ஏனிங்கே
செல்லும் பொருளிருக்கச் செல்லாம லோரிடத்தே
வல்லவனா மென்னை வளைக்கின்றாய் - சொல்லுகென்றால்"
பெட்டிகள் மாறலாம் பேரிரயில் மாறிடலாம்
இட்டிருக்கும் நல்ல இருக்கையே - ஒட்டிநீ
எங்கும் நகரா திருக்கும் திறன்கொண்டாய்!
தங்கியென் தூதைத் தரமாக - இங்குரைப்பாய்!
தென்றல் அவளைத்தான் தேடி அலையாது!
மன்ற நிலவுவந்து மண்ணுக்குள் - ஒன்றாது!
கிள்ளை பழம்தேடும் கின்னரங்கள் கூச்சலிடும்
பிள்ளையென் சோகம் பிதற்றாது! - துள்ளுகின்ற
சேடி எனக்கில்லை சேர்வதெலாம் அப்பெண்ணே!
ஓடும் நதிதூ துரைக்காது - கூடிப்
பிரிந்ததண்ட வாளங்கள் பின்னவளைக் கண்டு
விரித்தென்றன் சேதி விளம்பா - துரிமைக்
கவிதையது சென்றாலும் கன்னி அறியாள்!
தவமிருக்கும் கொக்கும் தடைதான்! - இவையெல்லாம்
செய்ய முடியாத செய்தற் கரியவினை
ஐய! முடிப்பாய் அதையறிவேன் - பைய
இருந்தவிடத் தேயிருந் தின்பமொழிப் பெண்ணாள்
வரும்பொழுதைப் பார்த்து வளமாய் - ஒருதவந்தான்
மேற்கொள்வாய் மீண்டும் மெலிவிடையாள் வந்துவிட்டால்
ஏற்றுன்னில் அன்போ டிருத்திவைத்து - நேற்றொருநாள்
உன்னிருக்கை தன்னில் உறங்கிக் கிடந்திட்ட
மன்மதனை ஒத்த மனத்தழகன் - என்னிடமோர்
சேதிசொன்னான் நானதனைச் செப்பிடுவேன் என்றுரைத்து
வாதிடா துன்மேல்நான் வார்க்கின்ற - தீதிலா
என்றன் தொலைப்பேசி எண்களைக் காட்டிநீ
உன்னிலவள் எண்வாங்கி வை!
-விவேக்பாரதி
22.05.2017

Comments
Post a Comment