ஆதிசிவா
சிவனைப்போல் என் நினைவில் ஆடிய இந்த சந்தம்....அப்படியே கவிதையாய்...
பாரதியாரின்
"நாட்டினில் எங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய்க் - கனல் - மூட்டினாய்" என்ற வண்ண மெட்டு.....
பொற்சடை மின்னிட வெள்ளி நிலாவினைப்
பூட்டினாய் - ஒளி - காட்டினாய்!
அற்புத கங்கையைக் கூந்தலில் கட்டிநீ
ஆடினாய் - இசை - பாடினாய்!
தற்பெரு மைசொல்ல தாக்கு மரவத்தைத்
தாங்கினாய் - நிலை - ஓங்கினாய்
கற்புக் கரசியை காயத்தின் பாதியில்
கட்டினாய் - வான் - முட்டினாய்!
வெள்ள மடைத்திட வேந்தன் பிரம்படி
வாங்கினாய் - வலி - தாங்கினாய்!
பள்ளை இசைத்திட நால்வரின் நெஞ்சிலும்
பாவினாய் - சுகம் - மேவினாய்!
நள்ளிருள் வேளையில் நர்த்தனத் தாண்டவம்
நாடினார் - மனத் - தாடினாய்!
பிள்ளை முருகனைத் தோற்ற நுதழ்விழி
பீய்ச்சினாய் - சுடர் - பாய்ச்சினாய்!
காலுதை வில்லடி காரிகை தொட்டிலும்
கண்டனை - அருள் - கொண்டனை
நூலுடை செந்தமிழ் நூதனம் யாவையும்
நோக்கினாய் - சபை - ஆக்கினாய்!
தோலுடை யாய்ப்புலி மேலுடை ஏந்திடத்
தோன்றினாய் - மனம் - ஊன்றினாய்!
ஆல விஷத்தினை ஏந்திக் குடித்தவா
ஆறினாய் - புகழ் - ஏறினாய்!
ஆதிசி வாவெனக் கூப்பிடும் நெஞ்சினுக்
கன்பினாய் - தனி - தெம்பினாய்!
வேத முழங்கமும் பாடல் புழக்கமுன்
வேண்டுவாய் - அருள் - தூண்டுவாய்
தீதை அழித்திடும் தீர னுயர்புகழ்
செப்பினோம் - அதற் - கொப்பினோம்
வாதை அடங்க வழிவகை செய்தெமை
வாழ்த்துவாய் - பகை - தாழ்த்துவாய்!!
-விவேக்பாரதி
13.02.2018
Comments
Post a Comment