மாலை அணிவோர் விரதம் | மணிப்பாவை
#மணிப்பாவை-2
மாலை அணிவோர் விரதம்மேற் கொள்ளணுமாம்
காலை எழுந்து கடகடென நீராடி
நீலம் கருப்பு நிறத்தாடை தாம்சாற்றி
ஆலம் அருந்திய ஈசற்கும் மோகினியாம்
மாலுக்கும் வந்த மகனைத் துதிக்கணுமாம்
நாளுமிது செய்யணுமாம் நம்தந்தை சொல்கின்றார்
மேலும் பலவுண்டாம் மென்மகளே கண்மலராய்
ஞாலத்து நாயகன்பேர் நாமுரைப்போம் எம்பாவாய்!
கருத்து :
நம் அப்பா சொல்கிறார், "ஐயப்ப சுவாமிக்கு மாலை போடுபவர்கள் விரதம் இருக்க வேண்டும். காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டும். எழுந்த உடன் குளிக்க வேண்டும். குளித்து, நீலம் அல்லது கருப்பு நிறத்தில் ஆடைகள் அணிந்து கொள்ள வேண்டும். அவ்வாறு அணிந்துகொண்டு ஆலகாக விஷத்தை அருந்திய பரமசிவனுக்கும் மோகினியாக மாறி வந்த மகாவிஷ்ணுவுக்கும் பிறந்த மகன், ஐயப்பன் திருப்பாதங்களைக் காண வேண்டும் என்று பிரார்த்திக்க வேண்டும்" என்கிறார். இன்னும் நிறைய இருக்கிறது என்றும் சொல்லிறார். எனவே மென்மையான என் தோழியே! உன் கண்களைத் திறந்து தூக்கம் விழித்துக்கொள்! நாம் சேர்ந்து இந்த உலகத்தைக் காக்கும் நாயகனான ஐயப்பன் பெயரைப் பாடி மகிழ்வோமாக!
-விவேக்பாரதி
18.10.2019
Comments
Post a Comment